மூல நோய்க்கு நிவாரணம் தரும் 5 வகையான உணவுகள்

Health Insurance Plans starting at Rs.15/day*

Health Insurance Plans starting at Rs.15/day*

மூல நோய் ஒரு அறிமுகம் :

மலக்குடல் மற்றும் ஆசனவாயின் உட்பகுதியில் உள்ள நரம்புகள் வீக்கமடைவதே மூல நோய் அல்லது பைல்ஸ் எனப்படுவதாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு, அவர்களின் குடல் இயக்கத்தின் போது, இரத்த நாளங்களின் உட்புறங்கள் மிகவும் மெலிந்து நீண்டு காணப்படும்; அதனால் நரம்புகள் வீங்கி எரிச்சலடையலாம். 

பொதுவாக மூலம் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோயல்ல, எனினும் அது சங்கடத்தையும், தாங்க முடியாத வலியையும் ஏற்படுத்தும். மூல நோயை பல்வேறு சிகிச்சையின் மூலம் எளிதாக கையாள்வதோடு, அதனால் ஏற்படும் வலியிலிருந்தும் நிவாரணம் பெறலாம். மூல நோய்க்கு நிவாரணமாக எவ்வகை உணவுகளை உண்ணலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

மூல நோயின் வகைகள் :

மூல நோயை இரண்டாக வகைப்படுத்தலாம் :

1. உள் மூலம் :

இந்த வகை மூல நோய் மலக்குடலுக்குள் உருவாகின்றன. வழக்கமாக இது வெளியே தெரிவதில்லை; மேலும், அரிதாகவே அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. 

இருப்பினும், ஆசனவாயின் வழியாக மலம் கடந்து செல்லும்போது, மிகவும் சிரமமாக இருக்கும். பெருமளவில் எரிச்சலை ஏற்படுத்தி, உட்புற தோலை சேதப்படுத்தி இரத்தப்போக்கை உண்டாக்கும். சில சமயங்களில், உள் மூல நோய், ஆசனவாய் வழியாக நீண்டு வெளிவந்து, வலி மற்றும் எரிச்சலை தூண்டலாம்.

2. வெளி மூலம் :

வெளி மூலத்தின் பாதிப்பினை நம்மால் காண முடியும்; ஏனெனில் இவை ஆசனவாயை சுற்றியுள்ள தோலின் கீழ் உருவாகலாம். சில நேரங்களில், ஆசனவாயின் வெளிப்புறத்தில் வெடிப்பு உருவாகி, இரத்தப்போக்கு ஏற்படலாம். 

அந்த வகை வெடிப்பினால் அரிப்பு, மற்றும் அதிக வேதனை உண்டாகும். வெளி மூலத்தில் ஏற்படும் இரத்தக்கசிவினால் இரத்த உறைவு (த்ரோம்போசிஸ்) உருவாகலாம். இதனால் கடுமையான வீக்கம் உண்டாகி, வலி ஏற்படும்.

மூல நோய்க்கான காரணங்கள்

மூல நோய் உண்டாக பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு :

  • கீழ் மலக்குடலில் வடிகட்டும் செயல் நிகழ்கையில், அழுத்தம் ஏற்பட்டு, அதனால் நரம்புகள் வீக்கமடைந்து மூலம் ஏற்படலாம்.
  • கழிவறையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும் மூல நோய்க்கு வழிவகுக்கும். 
  • மலச்சிக்கலும், வயிற்றுபோக்கும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தால், அது எரிச்சலை ஏற்படுத்தி அது மூலமாக மாறலாம்.
  • கருவுற்ற காலத்தில் கருப்பை பெரிதாகி, பெருங்குடலில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு அதனால் வீக்கம் உண்டாகி மூல பாதிப்பு நேரலாம்.
  • உடல் எடை அதிகரிப்பதால், இடுப்பு நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு மூல நோய்க்கு வழிவகுக்கலாம்.
  • நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்திற்குத் துணைபுரிவதால், மலச்சிக்கல் அபாயத்திலிருந்து விலகியிருக்கலாம். போதிய நார்ச்சத்து இல்லாவிடில் குடல் இயக்கத்தின் போது அதிக சிரமம் ஏற்பட்டு அதுவே மூலத்தினை தூண்டலாம்.
  • அதிக பளுவை மீண்டும் மீண்டும் சுமப்பதால், வயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு, மலக்குடல் நரம்புகள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி – மூல நோய் உருவாகலாம்.
  • வயது மூப்பின் காரணமாக, உங்கள் மலக்குடல் மற்றும் ஆசனவாயிலுள்ள நரம்புகளுக்கு ஆதரவாக நிற்கும் திசுக்கள் பலவீனமடைந்து நீண்டு மூலமாக வெளிப்படலாம்.

மூல நோயின் அறிகுறிகள்

ஒருவருக்கு ஏற்பட்டுள்ள மூலம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை பொறுத்து அவற்றின் அறிகுறிகளையும் உணரலாம் :

  1. உள் மூலம் : குடலின் செரிமான இயக்கங்களின் போது வலியற்ற இரத்தப்போக்கு ஏற்படலாம். டாய்லெட் பேப்பரிலோ அல்லது கழிப்பறையிலோ சிறிய அளவு அடர்சிவப்பு நிற இரத்தம் தென்பட்டால் அது உள் மூலமாக இருக்கலாம். இவ்வகை மூலம், ஆசன வாய் வழியாக வெளிவந்தால், அசௌகரியம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
  2. வெளி மூலம் : வெளிப்புறத்தில் ஏற்படும் இந்த வகை மூலம் ஆசனவாய் பகுதியில் அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்படும். தொடர்ந்து அமர்ந்த நிலையில் இருக்கும்போது ஒரு வித வலி அல்லது அசௌகரியம் உண்டாகும். ஆசனவாயைச் சுற்றி வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு ஏற்படும். வெளி மூலத்தில் இரத்தம் கோர்த்துக் கொள்வதால் அது உறைந்துபோய் – கடுமையான வலி, வீக்கம், மற்றும் ஆசனவாய் அருகே கடினமான கட்டியை ஏற்படுத்தும்.

மூல நோயினால் ஏற்படும் சிக்கல்கள் :

மூல நோய் ஆபத்தானது இல்லையென்றாலும், உரிய நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது பல விதமான தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும்:

  • இரத்த சோகை : 

நாள்பட்ட இரத்த இழப்பு ஏற்படுவதால், மூல நோய் இரத்த சோகையை ஏற்படுத்தும். இது உங்கள் திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாத நிலையை உருவாக்கி, சோர்வு மற்றும் பலவீனத்திற்கு வழிவகுக்கும்.

  • அழுத்தத்தின் காரணமாக இரத்த ஓட்டத்தை தடுக்கும் :

உள் மூல நோயினால் இரத்த ஓட்டம் துண்டிக்கப்பட்டால், அது கடுமையான வலியை ஏற்படுத்துவதோடு, திசு இறப்புக்கு வழிவகுக்கும் (கேங்க்ரீன்).

  • இரத்த உறைவு :

மூல நோய் இரத்த உறைவை உண்டாக்கி மிகுந்த வேதனையை எற்படுத்தக் கூடியது; அவற்றை அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்ற வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

மூல நோயிலிருந்து நிவாரணம் பெற உதவும் உணவுகள் :

1. பழங்கள் ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, வாழைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சு போன்றவை :

ஆப்பிள், பேரிக்காய் மற்றும் பெர்ரி போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆப்பிள்கள் மற்றும் பேரீச்சம்பழங்களை தோலுடன் சாப்பிடும்போது, கரையாத நார்ச்சத்தை வழங்குகின்றன. எனவே, மலம் எளிதாக வெளிவருகிறது. 

இப்பழங்களில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளதால், இவை நீர்ச்சத்தினை அளித்து, மலத்தை இலகுவாக வைத்திருக்க உதவுகிறது. பெர்ரி மற்றும் ஆரஞ்சு பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்துகள், இன்ஃப்ளமேஷனைக் குறைக்கவும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.

2. காய்கறிகள் ப்ராக்கோலி, கேரட், மற்றும் அனைத்து கீரை வகைகள் :

ப்ராக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளில் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இவை மலச்சிக்கலைத் தடுக்க உதவுகின்றன. காய்கறிகளில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிரம்பியுள்ளன.

எனவே அவை செரிமான ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த உடல்நலத்தையும் ஆதரிக்கின்றன. உதாரணமாக, கீரை வகைகளில் மெக்னீசியம் அதிகம் உள்ளது, இது மலத்தை இலகுவாக்க உதவுகிறது. எனவே காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் மூல நோயின் அபாயத்தை குறைப்பதற்கான முக்கிய ஆதாரங்களாக உள்ளன.

3. முழு தானியங்கள் ஓட்ஸ், முழு கோதுமை பிரெட், பிரவுன் அரிசி, பார்லி மற்றும் உமியுள்ள தானியங்கள் :

ரிஃபைன் செய்யப்பட்ட தானியங்களுடன் ஒப்பிடும்போது முழு தானியங்கள் அதிக நார்ச்சத்தை வழங்குகின்றன. இவை மலத்தை இலகுவாக்க உதவுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட (ரிஃபைன் செய்யப்பட்ட) தானியங்களை விட முழு தானியங்கள் மெதுவாக ஜீரணிக்கப்படுவதால், நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றன.

வயிறு நிறைந்த உணர்வை ஊக்குவித்து, அதிகப்படியான உணவுத் தேவையைத் தடுக்கிறது. ஓட்ஸில் பீட்டா-குளுக்கன் (beta-glucan) எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை கரையக் கூடிய நார்ச்சத்தும் உள்ளதால், அது செரிமான ஆரோக்கியத்தையும், உடல்நலத்தையும் இயல்பாக பராமரிக்க உதவுகிறது.

4. பருப்பு வகைகள் பீன்ஸ் (கிட்னி, கருப்பு), பயறு, கொண்டைக்கடலை மற்றும் பட்டாணி போன்றவை :

பருப்பு வகைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை, தண்ணீரைத் தக்கவைத்து எளிதான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கின்றன. பருப்பு வகைகள் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். மேலும், இவை அத்தியாவசிய அமினோ அமிலங்களை வழங்குகின்றன.

பருப்பு வகைகளில் உள்ள நார்ச்சத்து சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச உதவுவதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படுவதோடு மூல நோய் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்கிறது.

5. கொட்டைகள் மற்றும் விதைகள் பாதாம் பருப்பு, முந்திரி கொட்டை, ஆளி விதை மற்றும் சியா விதை போன்றவை :

கொட்டைகள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்துகள் ஆகியவையால் நிறைந்துள்ளன. ஆளிவிதைகள் மற்றும் சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், குடலில் ஜெல் போன்ற படிமத்தை உருவாக்கி மலத்தை சுலபமாக வெளியேற்ற உதவுகிறது.

ஆளி மற்றும் சியா போன்ற சில விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை, ஆன்டி-இன்ஃபளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளதால், மூல நோயுடன் தொடர்புடைய இன்ஃப்ளமேஷனைக் குறைக்கவும் உதவுகின்றன.

மூல நோய்க்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

மூல நோய்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க முடியும் என்றாலும், அதன் சில அறிகுறிகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது :

  • அதிகப்படியான இரத்தப்போக்கு : மலக்குடலில் கணிசமான அளவு இரத்தப்போக்கு நேர்ந்தாலோ, அல்லது மலத்தில் இரத்தம் கலந்திருப்பதைக் கண்டாலோ, உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். அதனால், பிற கடுமையான நிலைமைகளை முன்கூட்டியே சமாளிக்கலாம்.
  • கடுமையான வலி : ஆசனவாய் பகுதியில் தொடர்ச்சியான அல்லது தீவிரமான வலி இருக்கும்பட்சத்தில் அதனை ஒரு மருத்துவ நிபுணரிடம் தெரிவித்து, சிகிச்சை பெற வேண்டும்.
  • நீண்டகால மூல நோய் : உள் மூல நோய் வெளியே தென்பட ஆரம்பித்து, தானாகவே உள்வாங்கவில்லை என்றால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
  • நோய்த்தொற்றின் அறிகுறிகள் : காய்ச்சல், ஆசனவாய்ப் பகுதியில் சிவந்து காணப்படுதல், மற்றும் ஆசனவாயைச் சுற்றி வலி அதிகமாக ஏற்படுதல் போன்றவை ஏதேனும் நோய்த் தொற்றினைக் குறிக்கலாம். .
  • தீராத அறிகுறிகள் : வீட்டு சிகிச்சையை மேற்கொண்ட போதிலும் அறிகுறிகள் தொடர்ந்தால், மருத்துவரை அணுக வேண்டியதற்கான நேரம் இதுவென உணர வேண்டும்.

மூல நோய்க்கான மருத்துவ சிகிச்சைகள் :

வீட்டு வைத்தியம் உங்கள் மூல நோய் அறிகுறிகளைப் போக்கவில்லை என்றால், அதற்கான பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் உள்ளன :

  • ரப்பர் பேண்ட் சிகிச்சை : இந்த சிகிச்சை முறையில் – மூல நோயினால் வெளியே நீண்டுள்ள பகுதியின் அடிப்பகுதியைச் சுற்றி ஒரு ரப்பர் பேண்ட் மூலம் இறுகச் செய்து அதன் இரத்த ஓட்டம் துண்டிக்கப்படுகிறது, இதனால் மூல நீட்சி சுருங்கி விழுந்துவிடும்.
  • ஸ்கெலரோதெரபி (Sclerotherapy) : இந்த சிகிச்சையின் போது மூல நோயின் நீண்டுள்ள பகுதியை சுருக்க ஒரு ரசாயன கரைசல், அதன் திசுக்களில் செலுத்தப்படும், இதனால் விரிவடைந்த திசுக்கள் சுருங்கிவிடுகின்றன.
  • உறைவித்தல் (கொகுலேஷன்) : லேசர் அல்லது இன்ஃப்ராரெட் லைட் (infrared light) போன்ற நுட்பங்கள், மூல நோய்த் திசுக்களை உறையச் செய்து சுருக்க இந்த சிகிச்சை முறை உதவுகிறது.
  • ஹெமராய்டெக்டோமி (Hemorrhoidectomy): மூல நோயால் கடுமையான அல்லது தொடர்ச்சியான சிரமங்கள் ஏற்பட்டால் இந்த வகை அறுவை சிகிச்சை மூலம், தொந்தரவை அகற்ற வேண்டிய அவசியம் நேரலாம்.
  • ஸ்டேபிள்டு ஹெமோர்ஹாய்டோபெக்ஸி (Stapled Hemorrhoidopexy) : இந்த செயல்முறையானது மூல நோய்த் திசுக்களுக்குச் செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தைத் தடுத்து, அவற்றை சுருக்கி நிவாரணம் தருகின்றது.

முடிவுரை :

மூல நோய் என்பது ஒரு சாதாரண பாதிப்பாக இருந்தாலும், அதனால் கடுமையான அசௌகரியம் ஏற்படுகிறது. இருப்பினும் இது உயிருக்கு ஆபத்தான நோய் கிடையாது. மூல நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது, அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பது போன்றவற்றின் மூலம் இதனை முறையாக சமாளிக்கலாம்.

மூல நோயின் அறிகுறிகளை தணிப்பதற்கு அதிக நார்ச்சத்துள்ள உணவு, போதுமான நீரேற்றம், வழக்கமான உடற்பயிற்சி போன்றவை உதவுகின்றன. அறிகுறிகள் தொடர்ந்தால் அல்லது மேற்கொண்டு சிக்கல்கள் ஏற்பட்டால், பொருத்தமான சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிக முக்கியம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் :

1. யாருக்கு மூல நோய் ஏற்பட வாய்ப்புள்ளது?

குடல் இயக்கங்களின் போது கஷ்டப்படுபவர்கள், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள், பருமனானவர்கள் அல்லது குறைந்த நார்ச்சத்துள்ள உணவை உண்பவர்கள், மூல நோய் ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் ஆவர். நாள்பட்ட மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை மூல நோயின் ஆபத்தை அதிகரிக்கும்.

2. மூல நோய் தானாகவே குணமாகிவிடுமா?

சிலவகை மூல நோய் அறிகுறிகள் தானாகவே சரியாகக்கூடும். குறிப்பாக, அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, போதிய தண்ணீர் குடிப்பது மற்றும் வீட்டு சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் அவை குணமாகலாம்.
இருப்பினும், தொடர்ச்சியான அல்லது கடுமையான மூல நோய்க்கு நிவாரணம் பெறவும், மேற்படி சிக்கல்களைத் தடுக்கவும் மருத்துவரின் சிகிச்சை அவசியம் தேவை.

3. மூல நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்களா?

ஆம், அரிதாக குழந்தைகளும் மூல நோயால் பாதிக்கப்படலாம். மலச்சிக்கல், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மற்றும் குடலின் செரிமான இயக்கத்தின் போது சிரமப்படுவது போன்றவற்றால் அவர்களுக்கும் மூல நோய் உண்டாகக்கூடும்.
அதிக நார்ச்சத்துள்ள உணவு மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்வதன் வாயிலாக குழந்தைகளுக்கு மூல நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

4. மூல நோய் பற்றி விவாதிக்க எனக்கு கூச்சமாக இருக்கிறது. நான் என்ன செய்யவேண்டும்?

மூல நோய் பற்றி விவாதிக்க நீங்கள் வெட்கப்பட்டால், உங்கள் அறிகுறிகளையும் கவலைகளையும் உங்கள் மருத்துவரிடம் எழுத்து மூலமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
இருப்பினும் மருத்துவ வல்லுநர்கள் இதுபோன்ற சிக்கல்களை முறையாக இரகசியமாக கையாள பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

5. மூல நோய் பாதிப்பு இருப்பதால் பொது இடங்களில் எனக்கு எப்போதாவது இரத்தக்கசிவு ஏற்படுவதை எப்படி சமாளிப்பது?

மூல நோய் என்பது கீழ் மலக்குடல் அல்லது ஆசனவாயில் இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கமாகும். அதில் பிளவு ஏற்பட்டால் இரத்தப்போக்கு ஏற்படும், குறிப்பாக குடல் மலத்தை வெளியேற்றும் இயக்கங்களின் போது. அதிக அழுத்தம், நீட்சி அல்லது எரிச்சல் காரணமாக இரத்தப்போக்கு ஏற்படுகிறது.
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது கனமான பொருட்களைத் தூக்குதல் ஆகியவற்றால் அழுத்தம் அதிகரித்து மூல நோய் எந்த நேரத்திலும் – பொது இடங்களில் கூட இரத்தப்போக்கினை ஏற்படுத்தலாம். நீங்கள் பைல்ஸ் பிரச்சனையுடன் பயணம் செய்தால், பேட் அல்லது டாம்போன் அணிய தயங்க வேண்டாம். இருப்பினும் நிரந்தர தீர்வை நாடுவதே உண்மையான தீர்வாக இருக்கும்.


DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

Scroll to Top