சிறுநீரகக் கற்கள் வலியிலிருந்து தரும் நிவாரணம் 7 வழிகள்

Health Insurance Plans starting at Rs.15/day*

Health Insurance Plans starting at Rs.15/day*

சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலி ஒரு அறிமுகம் :

கீழ் முதுகில் ஒரு மந்தமான வலியாக ஏற்பட்டு சில நாட்களில் படிப்படியாகத் தீவிரமடையும் சிறுநீரகக் கற்களின் பிரச்சினையை பலர் ஆரம்பத்தில் தசைப் பிடிப்பு என்று தவறாகக் கருதிவிடுவதுண்டு.

வலி தாங்க முடியாததாக மாறிய பிறகு, அவசர சிகிச்சைத் தேவைப்படும் சூழல் ஏற்படலாம். எரிச்சலுடன் கூடிய வலி பிறப்புறுப்புப் பகுதியில் உண்டாகி, அத்துடன்  சிறுநீரில் இரத்தமும் காணப்படும் போது தான் பலர் அது சிறுநீரகக் கற்களால் உண்டானது என்பதையே தெரிந்து கொள்கின்றனர்!

இப்போது இளம் வயதினர் கூட சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த கட்டுரையில் – சிறுநீரகக் கற்கள் பற்றியும், அவை எப்படியெல்லாம் வலியை ஏற்படுத்துகின்றன என்பதையும், வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் ஏழு வழிகள் பற்றியும், சில இயற்கை நிவாரணிகள் பற்றியும் காண்போம்.

சிறுநீரகக் கற்களை எளிதாக புரிந்துகொள்வோம் :

வாஷிங் மெஷின்களை நாம் அனைவரும் அறிவோம். துணிகளில் உள்ள அழுக்கை நீக்கி, சுத்தமான ஆடைகளைத் தருவது அதன் வேலை.

அதேபோல் நமது இரத்தத்தை சுத்தப்படுத்தி அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சிறுநீர் வழியாக வெளியேற்றும் பொறுப்பு நமது சிறுநீரகங்களுக்கு உள்ளது.

வாஷிங் மெஷின்கள் மற்றும் சிறுநீரகங்களுக்கு இடையே சில ஒற்றுமைகள் உள்ளன, அதன் மூலம் சிறுநீரகக் கற்கள் குறித்து எளிதாக புரிந்து கொள்ளலாம் :

கனிமங்கள் சேர்தல் : சிறுநீரகங்கள் மற்றும் வாஷிங் மெஷின் ஆகிய இரண்டிலும், கனிமங்கள் சேரும் நிகழ்வு நிகழ்கிறது. 

உப்புத்தன்மை வாய்ந்த தண்ணீரில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் காலப்போக்கில் சலவை இயந்திரத்தின் டிரம்மின் உட்பரப்புகளில் ஸ்கேல்ஸ் எனப்படும் ஏடுகளாகப் படிகின்றன.

இதேபோல் கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற தாதுக்கள் படிகமாகி, சிறுநீரகங்களில் சேரும்போது அவை சிறுநீரக கற்களாக உருவாகின்றன.

அடைப்பு மற்றும் குறைபாடு : சலவை இயந்திரங்களில் ஸ்கேல்ஸ் உருவாகி தண்ணீர் குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, இயந்திரத்தின் மேசமான செயல்பாட்டிற்கு வழிவகுக்கும்.

இதேபோல், சிறுநீரகக் கற்கள் – சிறுநீர் பாதையைத் தடுக்கின்றன. இதனால் வலி ஏற்படுகிறது மற்றும் சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர்ப்பைக்கு இயல்பாக வரவேண்டிய சிறுநீரின் போக்கு பாதிக்கப்படுகிறது.

சிகிச்சை : சலவை இயந்திரங்களில் படிந்த உப்புகளை அகற்ற டீஸ்கேலிங் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன; அல்லது அவை படிவதைத் தடுக்க தண்ணீரின் உப்புத்தன்மையைக் குறைக்கும் சாஃப்ட்னர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வாஷிங் மெஷின்களைப் போல, சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க நமக்கு எவ்வித வெளி சுத்தப்படுத்திகளும் தேவையில்லை. சிறுநீர் வழியாக சிறிய படிகங்களை வெளியேற்ற தேவையான இயற்கையான அமைப்பினை நமது சிறுநீரகங்கள் கொண்டுள்ளன.

இருப்பினும், சில நேரங்களில் பெரிய சிறுநீரக கற்கள் உருவாகி இயற்கையாக வெளியேற்றப்படுவது சாத்தியமில்லாமல் போகிறது. அப்போது தான் மருத்துவ சிகிச்சையின் தேவை ஏற்படுகிறது.

பெரிய சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கான மருந்துகள், அவற்றை உடைக்க லித்தோட்ரிப்சி போன்ற நடைமுறைகள் அல்லது அவற்றை அகற்ற அறுவை சிகிச்சை என பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.

செயல்திறன் குறைபாடு : ஸ்கேலிங் பிரச்சினை எப்படி வாஷிங் மெஷின்களின் இயக்கம் மற்றும் செயல்திறனை பாதித்து – பழுதுபார்ப்பு அல்லது உதிரி பாகங்களை மாற்றுவதற்கு வழிவகுக்கிறதோ – அதேபோல், சிறுநீரகக் கற்களின் பாதிப்பினால் சிறுநீரக செயல்பாடு மற்றும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் கணிசமாக பாதிக்கலாம்.

இதனால் வலி, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, தீவிரமடைந்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சிறுநீரக பாதிப்பு கூட ஏற்பட்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை என்ற நிலை கூட உண்டாகலாம்.

சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலியின் பல்வேறு நிலைகள் :

சிறுநீரகக் கற்கள் மூன்று காரணிகளைப் பொறுத்து வலியை ஏற்படுத்துகின்றன : கற்கள் உருவாகும் இடம், கற்களின் நகர்வு மற்றும் சிறுநீரின் ஓட்டத்தில் அவை உருவாக்கும் தடை.

இதன் அடிப்படையிலேயே வலியின் தன்மையும், பாதிப்பின் தன்மையும் அனுமானிக்கப்படுகிறது. அதாவது கல் சிறுநீரகத்தில் உருவாகி, சிறுநீர்க் குழாய் வழியாக நகர்ந்து, சிறுநீர்ப்பையை அடைந்து பின்னர் பிறப்புறுப்பு வழியாக வெளியேற வேண்டும்.

இதில் ஒவ்வொரு நிலையிலும் அது வெவ்வேறு விதமான வலியை, பிரத்தியேக காரணங்களால் ஏற்படுத்துகின்றன. அது குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.

1. சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் :

சிறுநீரகத்தில் சிறுநீரகக் கற்கள் உருவாகும்போது, அவை பெரும்பாலும் வலியை ஏற்படுத்தாது. சிறிய கற்கள் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்தாமல் சிறுநீரகத்தில் அப்படியே இருக்கும்.

2. சிறுநீர்க்குழாயில் நகரும் கல் :

ஒரு சிறுநீரகக்கல் சிறுநீரகத்திலிருந்து வெளியேறி சிறுநீர்க்குழாயின் (சிறுநீரகத்தை சிறுநீர்ப்பையுடன் இணைக்கும் குழாய்) வழியாக நகரும்போது, அது லேசானது முதல் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.

வலி பொதுவாக இடுப்பின் பின்புறம் அல்லது பக்கவாட்டில், அதாவது விலா எலும்புகளுக்குக் கீழே உணரப்படுகிறது; பின்னர், வலி அடிவயிறு மற்றும் பிறப்புறுப்பு பகுதியை நோக்கி நகர்கிறது. சிறுநீர்க்குழாயின் உட்புறங்களில் கல் கீறல் ஏற்படுத்துவதால் ‘ரீனல் கோலிக்’ என்று அழைக்கப்படும் இந்த வலி உண்டாகிறது.

3. சிறுநீர்க்குழாயில் தேக்கமடையும் கற்கள் :

சிறுநீர்க்குழாயில் ஒரு சில சிறுநீரக கற்கள் தேக்கமடையும் போது – தீவிரமான, சுருக்கென்ற வலி மற்றும் பிடிப்பை அவை ஏற்படுத்தும். சிறுநீர்க்குழாயானது சுருங்கிய அசைவுகளின் மூலம் கல்லை சிறுநீர்ப்பையை நோக்கி தள்ள முயற்சிக்கும்.

இதனால் கடுமையான, வலி விட்டுவிட்டு ஏற்படும். இந்த கட்டத்தில் பெரும்பாலும் குமட்டல், வாந்தி, ஹெமாட்டூரியா (hematuria) எனப்படும் சிறுநீரில் இரத்தப்போக்கு, மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.

4. சிறுநீர்ப்பை அருகே உருவாகும் கல் :

சிறுநீரகக் கல் சிறுநீர்ப்பைக்கு நெருக்கமாக நகரும்போது, வலியானது கீழ் வயிறு மற்றும் இடுப்புப் பகுதிக்கு இடையே நகரும். வலியின் தீவிரம் மாறுபடலாம், சில நேரங்களில் கல் சிறுநீர்ப்பையை நெருங்கும்போது குறைவான வலி இருக்கலாம், ஆனால் தொடர் வலியாக அது நீடிக்கும்.

5. சிறுநீர்ப்பையில் உருவாகும் கல் :

சிறுநீரகக் கல் சிறுநீர்ப்பையை அடைந்தவுடன், சிறுநீர்ப்பையின் வெளியேற்ற பாதையில் அடைப்பை ஏற்படுத்தாவிட்டால் அது பெரிதாக வலியை உண்டாக்காது. அங்கிருந்து கல் பிறப்புறுப்பு வழியாக வெளியேறுவது அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் பொதுவாக சிறுநீர்க்குழாயில் ஏற்படுவது போன்ற வேதனையை உண்டாக்காது.

சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலிக்கான நிவாரணிகள் :

சிறுநீரகக் கற்களின் வலியை நிரந்தரமாக சரி செய்வதே சிறந்தது. நீண்ட கால நிவாரணம் பெறும் ஒரு நிரந்தர தீர்வையே அணுக வேண்டும். தற்காலிகமாக வலி நிவாரணத்தை நாடுவதை விட அதனை குணப்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் குணப்படுத்தாமல் போனால், சிறுநீரகக் கல் பிரச்சினை மோசமடைந்து கொண்டே போவதோடு, வலியும் கூடும். இருந்தாலும், ஆரம்ப கட்ட சிறுநீரகக் கற்களின் வலியைப் போக்க உதவும் சில இயற்கை நிவாரணிகள் மற்றும் அலோபதி மருந்துகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

வாழைத் தண்டு :

சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அவை உருவாவதைத் தடுக்கவும் உதவும் இயற்கையான டையூரிடிக் மருந்தாக வாழைத் தண்டு சித்த மருத்துவத்தில் நெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாழைத் தண்டுச் சாறு எளிதாக அருந்தக் கூடிய ஒன்று.

அதன் நன்மைகளை அதிகரிக்க, தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. சாறாக இல்லாமல் வாழைத் தண்டை சமைத்தும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறுநீரகத்தில் உள்ள கற்களை அங்கேயே கரைத்து வெளியேற்ற வாழைத்தண்டு சாறு உதவுவதால், சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலி ஆரம்பத்திலேயே தடுக்கப்படுகிறது.

நீர் முல்லி (Hygrophila auriculata) :

நீர் முல்லி அதன் டையூரிடிக் (சிறுநீரை வெளியேற்றும் பண்பு) மற்றும் லித்தோட்ரிப்டிக் (lithotriptic – சிறுநீரக கற்களைக் கரைக்கும்) பண்புகளுக்குப் பெயர் பெற்றது. சிறுநீரக கற்களைக் கரைப்பதற்காக சித்த மருத்துவத்தில், நீர் முள்ளியின் வேர்கள் மற்றும் விதைகள் கொண்டு ஒரு கஷாயம் தயாரித்து மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

வேர்கள் மற்றும் விதைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதன் திரவத்தை உட்கொள்வதன் மூலம் ஏற்கனவே இருக்கும் கற்களை உடைத்து, அவற்றை வெளியேற்றவும் உதவுகிறது. இதனால் சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலிக்கு நிவாரணம் கிடைக்கிறது.

நீர் மருது (Tribulus terrestris) :

இந்தத் தாவரம் வலுவான டையூரிடிக் விளைவுகளுக்குப் பெயர் பெற்றது, நீர் மருது சிறுநீரகக் கற்களை வெளியேற்றுவதை ஊக்குவிப்பதில் பயனுள்ள நிவாரணியாக செயல்படுகிறது.

இது பொதுவாக ஒரு கஷாயமாகத் தயாரிக்கப்படுகிறது. நீர் மருது சாற்றைத் தவறாமல் உட்கொள்வதன் மூலம் சிறுநீரகக் கற்கள் ஏற்படுத்தும் வலியைக் குறைத்து, சிறுநீரக ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. மேலும் கல் உருவாகும் சாத்தியத்தையும் குறைக்கிறது.

கடுக்காய் (Terminalia chebula) :

சிறுநீரகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கடுக்காய் சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடுக்காய்ப் பொடியை பொதுவாக தண்ணீரில் அருந்த பரிந்துரைக்கப்படுகிறது.

இது சிறுநீர் பாதையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், அதில் கல் உருவாவதைத் தடுக்கவும், அதனால் ஏற்படும் வலியைத் தடுக்கவும், உடலிலிருந்து நச்சுக்களை அகற்றவும் உதவுகிறது.

சுடு ஒத்தடம் :

வலியுள்ள பகுதியில் வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியைக் கொண்டு ஒத்தடம் தரலாம். இது அந்தப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமும், தசையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும், சிறுநீரகக் கற்களால் வெளிப்புறத்தில் உண்டாகும் வலிகளை குறைக்க உதவுகிறது. இது மருந்து அல்லாத ஒரு சிகிச்சை முறையாகும்.

அலோபதி மருந்துகள் :

வலி மருந்துகள் :

இப்யூபுரூஃபன் (ibuprofen) மற்றும் பாராசிட்டமால் (paracetamol) போன்ற வலி நிவாரணிகள் சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலியைக் விரைவாக குறைக்க தற்காலிகத் தீர்வாக இருக்கும்.

இப்யூபுரூஃபன், ஒரு ஸ்டீராய்டு அல்லாத ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்து (NSAID) என்பதால் இன்ஃப்ளமேஷன் மற்றும் வலியைக் குறைக்கிறது; அதே நேரத்தில் பாராசிட்டமால் மூளையில் வலி சமிக்ஞைகளைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது.

கடுமையான வலிக்கு, வலுவான NSAID மருந்துகள் உள்ளிட்ட மருத்துவரால் பரிந்துரைக்கப்பட வேண்டிய மருந்துகள் அவசியமாக இருக்கலாம். இருப்பினும் அவை பக்க விளைவுகளையும், அதனையே சார்ந்திருக்கும் சூழலையும் உண்டாக்கலாம்.

ஆல்பா ப்ளாக்கர் மருந்துகள் :

டாம்சுலோசின் (tamsulosin) போன்ற மருந்துகள் சிறுநீர்ப் பாதையில் உள்ள தசைகளைத் தளர்த்துவதன் மூலம், கற்கள் கடந்து செல்வதை எளிதாக்கி, வலியைக் குறைக்க உதவுகின்றன.

இவை சிறுநீர்க்குழாயில் அமைந்துள்ள கற்களால் உண்டாகும் வலியை குறைக்க மிகவும் பயனுள்ள தீர்வாக இருக்கும். கல் வெளியேற்றத்திற்கு உதவுவதால் டாம்சுலோசின் வலி மருந்துகளின் தேவையை கணிசமாகக் குறைக்கின்றது.

முடிவுரை :

சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலிக்கு நிவாரணம் காண்பது ஒரு தற்காலிகத் தீர்வுதான். நீண்ட காலத் தீர்வுக்கு – உணவு மாற்றங்கள், அதிகமாகத் தண்ணீர் அருந்துவது, உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வது மற்றும் சித்த மருத்துவம் போன்ற பாரம்பரிய வீட்டு வைத்தியங்களும் பெரிதும் முக்கியமானவை.

அறிகுறிகள் மற்றும் அடிப்படைக் காரணங்கள் இரண்டையும் முறையாகப் புரிந்துகொண்டு, வலியின் தன்மைக்கு ஏற்ப அணுகுவதன் மூலம் சிறுநீரகக் கற்களின் பிரச்சினைக்கு சரியானதொரு நிரந்தர நிவாரணம் பெறலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் :

1. குழந்தைகளுக்கு சிறுநீரக கற்கள் உண்டாகும் வாய்ப்புள்ளதா? 

ஆம், குழந்தைகளுக்கும் சிறுநீரக கற்கள் உருவாகலாம்; இருப்பினும் இது பெரியவர்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. மரபியல், உணவு மற்றும் நீரிழப்பு ஆகிய காரணங்களால் குழந்தைகளுக்கும் ஏற்படலாம்.

2. தண்ணீரின் தன்மையால் சிறுநீரகக் கற்கள் உண்டாகுமா? 

அதிக கனிம உள்ளடக்கம் கொண்ட குடிநீர், குறிப்பாக கால்சியம் நிறைந்த தண்ணீர் – சிறுநீரகக் கல் உருவாவதற்குப் பங்களிக்கும். வடிகட்டப்பட்ட அல்லது குடிக்க உகந்த அளவு தாதுக்கள் உள்ள தண்ணீரை அதிகளவு அருந்துவதால் இந்த ஆபத்தைக் குறைக்கலாம்.

3. அதிக உப்பு சேர்ப்பது சிறுநீரக கற்களை ஏற்படுத்துமா? 

ஆம், அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் சிறுநீரகங்கள், சிறுநீரில் அதிக கால்சியத்தை வெளியேற்றுகிறது; இதனால் சிறுநீரகக் கற்கள் உண்டாகும் அபாயம் அதிகரிக்கும். உணவில் அளவாக உப்பு சேர்ப்பது இந்த ஆபத்தைக் குறைக்க உதவுகிறது.

4. சிறுநீரகக் கற்களைக் குறைக்க என்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? 

அதிக ஆக்ஸலேட்டுகள் (கீரை, கொட்டைகள்), விலங்குகள் மூலம் கிடைக்கும் புரதங்கள் மற்றும் அதிகப்படியான சோடியம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். சமச்சீரான உணவு முறையைப் பின்பற்றவும்.

5. சிட்ரிக் பழங்கள் சிறுநீரகக் கற்களுக்கு ஏன் பரிந்துரைக்கப்படுகின்றன? 

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரிக் பழங்களில் சிட்ரேட் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது சிறுநீரில் கால்சியத்தைப் பிணைப்பதன் மூலம் சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. எனவே சிட்ரிக் பழங்களை வழக்கமாக உட்கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

Scroll to Top